search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊஞ்சல் உற்சவம்"

    • அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
    • அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண வருவது வழக்கம்.

    உலக ஜீவன்களுக்கு படி அளக்கும் சிவனுக்கே ஒரு தடவை பிரம்ம தோஷம் பிடிக்கிறது.

    சிவ ராத்திரி அடுத்த நாள் மயானக் கொள்ளை மூலம் அங்காள பரமேஸ்வரியால் சிவனுக்கு பிரம்ம தோஷம் நீங்குகிறது. ஆகையால் மேல்மலையனூர் சக்தி புராணங்களில் இடம் பிடித்தது.

    அமாவாசைக்கு முன்பு சிவராத்திரி தினமாகும். மறுநாள் அமாவாசை அன்று சுடுகாட்டில் அம்மனை சாந்தி படுத்த படையலிட்டு பொறி, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை படையலிட்டு பிரம்மன் தலைக்கு இறைப்பது வழக்கம்.

    அன்று இரவு அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துவார்கள். அமாவாசை அன்று வழக்கமாகவே அம்மன் உக்கிரமாக இருப்பாள் என்றும் அம்மனை சாந்தி படுத்தவே ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதனால் அன்றைக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைக்கும்.

    ஏவல், பில்லி சூனியம் நீங்கும் நினைத்த காரியங்கள் நடை பெறும். பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு பிரம்ம கத்தி தோஷம் பிடித்த இந்த பிரம்ம கத்தி தோஷம் மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது நிவர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொன்றாலோ அல்லது அழித்தாலோ பிரம்ம கத்தி தோஷம் பிடிக்கும் என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொன்று இருக்கலாம். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    நீங்களும் சிவன் போல் பித்து பிடித்து அலைய வேண்டாம். இதற்கு பரிகாரம் மேல்மலையனூரில் அமாவாசை நாளில் சென்று இரவு தங்கினால் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பிரம்மகத்தி தோஷமும் நிவர்த்தியாகும்.

    1. மேல்மலையனூரில் அமாவாசை தினத்தன்று நடக்கும் அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    2. அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    3. தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியத்துக்கு `திரிமதுரம்' என்று பெயர். இந்த நைவேத்தியம் அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகும்.

    4. அங்காள பரமேசுவரிக்கு செம்பருத்திப்பூ மாலை அணிவித்து 48 நாட்கள் வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    5. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும்.

    6. அங்காள பரமேஸ்வரி அருளால் குழந்தைபாக்கியம் பெறுபவர்கள், பிறகு அந்த குழந்தை எடைக்கு எடை நாணயம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    7. தடைகள் விலகி திருமணமாகும் பெண்கள் மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போடுவதை திருப்பதியில் பார்திருப்பீர்கள். அதே போன்று இத்தலத்திலும் மாங்கல்யத்தை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

    8. மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களில் பலர் அதை பிரசாதமாக வினியோகிப்பார்கள். சிலர் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அடை மாதிரி மாற்றி சாப்பிடுவார்கள்.

    9. இத்தலத்து கொடி மரம் பலி பீடம் அருகில் இல்லாமல், கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

    10. ஆடி அமாவாசை தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை முழுவதும் திறந்து இருக்கும்.

    • கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள்.
    • அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.

    மேல்மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். ஆங்காரமாகவும அகோரமாகவும் இருந்த அன்னை திருவண்ணாமலை சென்று புனித நீராடி தன் சுயஉருவம் பெற்று மீண்டும் மேல்மலையனூர் வந்து அமர்ந்தாள் என்பது புராண வரலாறாகும்.

    அதனால் தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரி சற்று வித்தியாசமாக காணப்படுகிறாள். அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக பார்த்தால் அவள் ஆவேசத்துடன் இருப்பது போல தோன்றும்.

    பொதுவாக வடக்கு திசை நோக்கி இருக்கும் கடவுள்கள் ஆவேசத்துடன் காணப்படுவார்கள் என்று சொல்வார்கள். அதை உறுதிப்படுத்துவது போல அங்காள பரமேசுவரி தோற்றம் அமைந்துள்ளது.

    நாம் மகிழ்ச்சியுடன் பார்த்தால் அவளும் நம்மை மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல இருக்கும் என்றார். அது உண்மை தான் என்பதை கருவறை அருகில் சென்று வரும் ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக உள்ளது.

    கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள். பொதுவாக சிவசக்தி ஒருங்கே காணப்படும் போது அம்பாள் அருகில் ஈசனை லிங்க வடிவில் தான் வைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் அம்பிகை அருகில் ஈசன் மானிட உருவில் இருக்கிறார்.

    இத்தகைய சிவசக்தி அமைப்பு தமிழ்நாட்டில் மேல்மலையனூரில் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலத்தின் சிறப்புகளில் இந்த கருவறை அம்சம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் சற்று பின்னோக்கி மல்லாந்த நிலையிலும் ஈசன் ரிஷப வாகனத்திலும் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ளனர். அங்காள பரமேசுவரி இந்த அமைப்பில் மல்லார்ந்த பார்வையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி தன் இடது காலை மடித்து வலது காலை பிரம்மன் தலை மீது வைத்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் காலடியில் மேலும் 4 தலைகள் உள்ளது. அரக்கர்களை அங்காளம்மன் தன் காலில் மிதித்து வைத்திருப்பதாக இது உணர்த்துகிறது.

    அங்காள பரமேஸ்வரிக்கு முழுமையான மலர் மாலை அலங்காரம் செய்து விடுவதால் பக்தர்களுக்கு இந்த வடிவ அமைப்பு தெரிய வாய்ப்பில்லை.

    அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. அவளது 4 கரங்களில் முன் கரங்களில் கத்தி, கபாலம் வைத்துள்ளாள். பின் கரங்களில் உடுக்கையும் சூலமும் தரித்துள்ளாள். தலையில் நாக மகுடம் சூடி இருக்கிறாள். இவற்றையெல்லாம் கண்டு உள்ளம் உருக வழிபட்டால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் லேசாகி விடும்.

    திருமணம் கைக்கூடும்

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சம அளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல வேண்டும். அது முடிந்ததும் அங்காள பரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

    • கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
    • பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.

    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றாலும் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவதையே சிறப்பாகவும் புண்ணியம் தருவதாகவும் கருகிறார்கள்.

    குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே உள்ளன. கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வருகிறார்கள்.

    ஆலய வளாகத்துக்குள் நுழைவு வாயிலின் அருகே பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அங்கு பெண்கள் பொங்கலிடுகிறார்கள்.

    பொங்கல் தயாரானதும் அதன்மீது மூடியில் பச்சரிசி மாவை பிசைத்து மாவிளக்கில் தீபம் ஏற்றி உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த பொங்கலை அப்படியே அங்களம்மனுக்கு தீபாராதனையாக காட்டி வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த காட்சியை அதிகமாக இத்தலத்தில் காணலாம்.

    மங்கலம் தரும் குங்குமம்

    அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.

    ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது.

    பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.

    மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

    அங்காளம்மன் காயத்ரி

    ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.

    • அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி நல்லுறவு ஏற்படும்.
    • பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள்.

    சில கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன் மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல் மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்தி கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    3 வகை பிரசாதம்

    மேல் மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும்.

    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே "அங்காளி" என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி "அங்காள பரமேஸ்வரி" என்றானது.

    அங்காளம்மன் யாக குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன் அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு வாங்கி செல்வதை காணலாம்.

    மக்கள் கூட்டம்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் எத்தனையோ விழாக்கள் நடந்தாலும் மாதம் தோறும் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரியின் ஊஞ்சல் உற்சவத்தை நேரில் கண்டு வழிபட்டால் மன துயரங்கள் எல்லாம் மாயமாகி விடும் என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்களிடையே இந்த நம்பிக்கை அதிகரித்து பரவி வருவதால் அமாவாசை நாட்களில் மேல் மலையனூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அமாவாசைக்கு அமாவாசை அதிகரித்தப்படி உள்ளது.

    சாதாரண அமாவாசை நாட்களில் சராசரியாக 5 லட்சம் பேர் மேல்மலையனூர் வருவதாக கணித்துள்ளனர். ஆடி அமாவாசை தின வழிபாடு கூடுதல் பலன்கள் தர வல்லது என்பதால் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 7 லட்சம் பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள்.

    • காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர்.
    • இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. அந்த நாட்களில் வழக்கத்தை விட பெண்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    மேலும் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த ஆடி மாதம் முழுவதும் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். காலை வேளையில் உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரத்தில் சன்னதி முன்புள்ள மகா மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர். இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் சன்னதிக்குள் எழுந்தருளுவார். மறுநாள் காலை மீண்டும் மகா மண்டபத்துக்கு வருவார். இப்படி அந்த ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது விசேஷமானது ஆகும். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு கூழ்படைத்து வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் நேர்ச்சை கடன் செலுத்தும் பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவர்.

    இதேபோல நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.

    • சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை
    • வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம்

    காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக் காலங்களே.

    சித்திரையில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் முந்தைய நாள் மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகபெருமான் வீதி உலா நடைபெற்று, இத்திருக்கோவிலின் அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று புதுமண் கொண்டு வந்து மறுநாள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.

    முதல் நாள் இரவு அம்பாள் வீதி உலாவும், 2-ம் நாள் இரவு காமதேனு வாகனத்திலும், மூன்றாம் நாள் காலை பூதகி வாகனத்திலும், நான்காம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும், ஏழாம் நாள் காலை தேரோட்டமும், எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் இரவு கிண்ணித் தேர் என வழங்கும் ஸ்ரீ சக்ர ரதாரோஹனத்தில் ஸ்ரீ அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பத்தாம் நாள் காலை ஸ்ரீ நடராஜர் உற்சவமும், பின்பு தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு விசாகத்தை முன்னிட்டு ஆறுமுக சாமி உற்சவமும், கொடி இறக்கமும் நடைபெறுகின்றது. அடுத்து பந்தம்பறி உற்சவமும், அதற்கு மறுநாள் ஸ்ரீ உற்சவமூர்த்தி ஸ்ரீ அம்பாளுக்கும் மற்றுமுள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறுகின்றது.

    பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அலங்கார ஸ்ரீ நடராஜர் மண்டபத்திற்கு வருகை புரிந்த உற்சவமூர்த்தி அம்பாள் அமாவாசை அன்று தன் ஆஸ்தானத்திற்கு செல்லும் ஆஸ்தான பிரவேச உற்சவமும் நடைபெறும். அதற்கு மறுநாள் அம்பாளின் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகின்றது.

    ஆனி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த உற்சவமும் ஆடியில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இரவு வெள்ளி தொட்டிலில் ஊஞ்சல் உற்சவமும் பத்து ஞாயிற்றுக்கிழமைகள் பகல் 11 மணியளவில் முறையே 108 குடம் பாலபிஷேகம், 108 குடம் இளநீர் அபிஷேகம், 108 குடம் தயிர் அபிஷேகம், 108 குடம் மஞ்சள் அபிஷேகம், 108 குடம் சந்தன அபிஷேகம், 108 குடம் விபூதி அபிஷேகம், 108 குடம் பன்னீர் அபிஷேகம், 108 குடும் பஞ்சாமிர்த அபிஷேகம், 108 பூக்கூடையால் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றது.

    மேலும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகமும, மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசியில் பத்து நாட்கள் சாரதா நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

    நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் துன்பங்களை நீக்கும் துர்க்கா பரமேஸ்வரியாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் ஞானபாக்கியத்தைத் தரும் ஸ்ரீ சரஸ்வதியாகவும் அருள்பாளிக்கிறாள்.

    இந்த நவராத்திரியின் ஏழாம் நாளன்று ஸ்ரீ அம்பாளுக்கு நவவர்ண பூஜை நடைபெறுகின்றது. மேலும் இந்த நவராத்திரி தினங்களில் குழந்தைகளை அம்பாளாக பாவித்து பூஜை செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த நவராத்திரி தினங்களில் மாலையில் இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி பவுர்ணமியில் அருள்மிகு கமடேஸ்வரர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவமும், லட்சார்ச்சனையும், சூரசம்ஹார உற்சவமும் நடைபெறுகின்றது.

    சூரசம்ஹாரத்தின் மறுநாள் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றன. ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தின் போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் சோம வாரங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் இரவு வெள்ளித் தொட்டியில் ஸ்ரீ அம்பாள் அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவாள்.

    கார்த்திகை தீபத்தன்று ஒன்பது பெரிய அகலில் தீபமேற்றி அம்பாள் எதிரில் மஹா தீபாராதனை நடைபெற்று ஒவ்வொரு சன்னதியில் மேற்படி அகல் தீபம் ஏற்றப்பட்டு ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். பின்பு, அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் கோவிலில் வெளியில் வந்து நிற்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் தினசரி விடியற்காலை 4.30 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் உள்பட பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து பக்தி பரவசத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்து கூட்டு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

    மார்கழி மாதத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் ஸ்ரீ நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

    தை மாதத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி விழாவும், தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு மகுடாபிஷேகமும் நடைபெறுகின்றது. அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ அம்பாள் தெப்ப உற்சவத்திற்காக எழுந்தருளுவார்.

    மாசி மாதம் மாசி மகத்தன்று ஸ்ரீ அம்பாள் சென்னை கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மக உற்சவம் நடைபெறுகின்றது. மாசி கிருத்திகையன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும், இரவு மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகபெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது.

    பங்குனி மாதத்தில் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த நவராத்திரி விழாவும் குங்கும லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றது.

    ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்திருக்கோவிலில் நாள் தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    • தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.
    • பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி, குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 12 மணியளவில் தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது.
    • இன்று முதல் 3-ந்தேதி வரை தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராகும் ஊஞ்சலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி வரை 9 நாட்கள் தினமும் 6 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணத்தின்போதும், ஆவணி மாதத்தில் நடைபெறும் புட்டுத்திருவிழாவின் போதும் உற்சவர், தெய்வானையுடன் கோவிலுக்கு சென்று வருவதால் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தங்கரதம் உலா நடைபெறுவதில்லை. ஆனி ஊஞ்சல் திருவிழாவின்போது கோவிலுக்குள்ளே சுவாமி இருந்த போதிலும் தங்க ரதம் வலம் வரக்கூடிய திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சல் அமைக்கப்படுவதால் இன்று முதல் 3-ந்தேதி வரை 10 நாட்கள் தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    • 3-ந்தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
    • 25-ந்தேதி இரவு முதல் 26-ந்தேதி அதிகாலையில் 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • உற்சவ அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
    • பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இள நீர், பன்னீர் ஆகிய வற்றால் அபி ஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்யப் பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணி யளவில் உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக எடுத்துச் செல்லப் பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த படி முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணியள வில் அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு அம்மன் கோவிலுக்குள் சென்று உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாது காப்பு பணியில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்தி களுடன் 100 கால் மண்ட பத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வர்.

    வருகிற 26-ந்்தேதி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வெள்ளியம்பல நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு ஆனி உத்திர திருமஞ்சனம் நடை பெறும். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுக்கு பிறகு காலை 7 மணிக்கு பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் பல்லக்கில் எழுந்த ருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.

    ஜூலை 3-ந்தேதி உச்சி கால பூஜையில் மூலவர் சொக்கநாத பெருமானுக்கு முக்கனி அபிஷேகம் நடை பெறும். இதற்கு பக்தர்கள் அபிஷேக பொருட்களை 25-ந் தேதி 7 மணிக்குள் வழங்கலாம். தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம் வருவார்கள். வருகிற 23-ந்தேதி மாணிக்கவாசகர் புறப்படும், ஜூலை 3-ந்தேதி அருணகிரி நாதர் புறப்பாடும் நடை பெறும்.

    திருப்பரங்குன்றம் கோவில்

    திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற 24-ந்தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்ட பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 3-ந் தேதி முக்கனி பூஜை நடைபெறும். அன்றைய தினம் உச்சிகால வேளையில் சுப்பிரமணியர், சத்யகிரீசுவரர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாய கருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்றனர். 

    அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.
    பெரணமல்லூரில் உள்ள அஙகாள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா நடந்தது. பெரணமல்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையன்று ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதனையொட்டி காலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் பாம்பு புற்றுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 6 மணி அளவில் பூ கரகம் ஜோடித்தும், சூரிய குளம்படிக்கட்டு் அருகே 16 கைகளுடன் உள்ள காளி தேவதைக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

    அப்போது பலர் அருள் வந்து ஆடினர். ஏற்கனவே ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் வேண்டிக்கொண்டு சென்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை காசுகள் வைத்து துலாபாரம் செய்து நேர்த்திக்கடன் செலுதினர். பின்னர் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 12 மணிக்கு பூரணகும்பம் படையல் செய்து அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பெரணமல்லூர், ஆரணி, செய்யாறு, சென்னை, வந்தவாசி திருவண்ணாமலை உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை அமாவாசை விழாக்குழுவினர் செய்தனர்
    ×